வேல் வழிபாடு

  • அனைவரும் அவசியம் வழிபட வேண்டிய வழிபாடு வேல் வழிபாடு.*

முழுமையாக தேவராய சுவாமிகள் முருகனை நினைத்து உள்ளம் உருகி பாடிய சத்ரு சம்கார வேல் பதிகத்தை முழுமையாக நம் சித்தர்களின் குரல் அன்பர்களுக்காக தருகிறேன்…. தினம் தினம் அனைவரும் அவசியம் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம் இந்த சத்ரு சம்கார வேல் பதிகம்.

வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட தடைகள் , பிரச்சனைகள் , துன்பங்கள் இருந்தாலும் அத்தனையையும் அறுத்தெறிந்து நம்பியவர்களை காக்கும் அபூர்வ பதிகம் இந்த ஸ்ரீ சத்ரு சம்கார வேல் பதிகம்

ஒரு மண்டலம் (48நாட்கள்) இந்த பதிகத்தை முருக பெருமானை நினைத்து உள்ளம் உருக பாராயணம் செய்தால் முருக பெருமானே குருவாக வந்து உங்களை வழிநடத்துவார். இது தேவராய ஸ்வாமிகளின் அருள் வாக்கு.

சத்ரு சம்ஹார வேல் பதிகத்தை காலை மற்றும் மாலை 6 முறை பாராயணம் செய்தல் சிறப்பு. தினமும் காலை மாலை சத்ரு சம்ஹார வேல் பதிகத்தை பாராயணம் செய்து வந்தால் தீவினைகள் எதிரிகள் ,பில்லி,சூன்யம் அகலும். எதிரி தொல்லைகள், வஞ்சகர்கள், கண்ணுக்கு தெரிந்த மற்றும் மறைமுக எதிரிகளும் அகல்வர். தீராத நோய்கள் அனைத்தும் தீரும், சகல வறுமை பிணிகளும் சூரியனை கண்ட பனி போல் மறையும்.

”சத்ரு சம்ஹார வேல் பதிகம்”:


சண்முகக் கடவுள் போற்றி !

சரவணத் துதித்தாய் போற்றி

கண்மணி முருகா போற்றி !

கார்த்திகை பாலா போற்றி !

தண் மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி !

விண்மதி வதன-வள்ளி வேலவா போற்றி ! போற்றி !

அப்பமுடன் அதிரசம் பொறிக் கடலை

துவரை வடை அமுது செய் இப-முகவனும்,

ஆதி கேசவன் லட்சுமி திங்கள்

தினகரன் ஐராவதம் வாழ்கவே !

முப்பத்து முக்கோடி வானவர்கள்

இடர் தீர முழுது பொன்னுலகம் வாழ்க !

மூவரொடு கருட கந்தருவர் கிம்புருடரும்

முது மறைக் கிழவர் வாழ்க !

செப்பரிய இந்திரன் தேவி அயிராணி தன்

திருமங்கலம் வாழ்கவே !

சித்த வித்யாதரர் கின்னரர்கள்

கனமான தேவதைகள் முழுதும் வாழ்க !

சப்த கலை விந்துக்கும் ஆதியாம் அதி ரூப

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !

சித்தி சுந்தரி கௌரி அம்பிகை கிருபாநிதி

சிதம்பரி சுதந்தரி பரசிற்பரி

சுமங்கலி நிதம்பரி விடம்பரி

சிலாசுத விலாச விமலி

கொத்து திரிசூலி திரிகோணத்தி

ஷட்கோண குமரி கங்காளி ருத்ரி

குலிச ஓம்காரி ரீங்காரி ஆங்காரி

ஓங்காரி ரீன்காரி அம்பா

முத்தி காந்தாமணி முக்-குண

சுந்தரி மூவர்க்கு முதல்வி

ஞான முதுமறைக் கலைவாணி அற்புத

புராதனி மூவுலகும் ஆனா ஜோதி

சக்தி சங்கரி நீலி கமலி பார்வதி தரும்

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !

மூரியுள முப்பத்து முக்கோடி

தேவரும் முனிவரோடும் அசுரர் கூடி

முழு மந்தர கிரி தன்னை மத்தாகவே

செய்து முற்கணத்து அமுது பெறவே

கோரமுள வாசுகியின் ஆயிரம்

பகுவாயில் கொப்பளித்திடு விடங்கள்

கோளகையு மண்டலங்கள் யாவையும்

எரித்திடும் கொடிய வர வினைப் பிடித்து

வீரமுடன் வாயினாற் குத்தி உதிரம்

பரவ இரு தாளிலே மிதித்து விரித்துக்

கொழும் சிறகடித்தே எடுத்துதரும்

விதமான தோகை மயில்

சாரியாய் தினமேறி விளையாடி வரு முருக

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !

உக்ரமுள தாருகன் சிங்கமா சூரனும்

உன்னுதற்கு அறிய சூரன்

உத்தி கொளும் அக்நிமுகன் பானுகோபன்

முதல் உத்தண்ட அசுரர் முடிகள்

நெக்கு விட கரி புரவி தேர்கள்

வெள்ளம் கோடி நெடிய பாசங்கள் கோடி

நிறையிலா வஸ்திரம் வெகு கோடிகள்

குருதி நீரில் சுழன்று உலவவே

தொக்கு தொகு திதி திதிமி டுண் டுடுடு

டகுகு டிகு துந்துமி தகு குதிதிகுதை தோத்தி

மிடங்கு குகு டிங்கு குகு

சங்குஎன தொந்தக் கவந்தம் ஆட

சக்ரமொடு சத்தி -விடு-தணிகை சென்னியில் வாழும்

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !

அந்தியில் பேச்சி, உருமுனிக் காட்டேரி,

அடங்காத பகல் இரிசியும்,

அகோர-கண்டம், கோர-கண்ட-சூன்யம்,

பில்லி, அஷ்ட-மோகினி, பூதமும்,

சந்தியான வசுகுட்டி, சாத்தி ,

வேதாளமும், சாகினி, இடாகினிகளும்,

சாமுண்டி, பகவதி, ரத்தக்-காட்டேரி,

முதல் சஞ்சரித்திடு முனிகளும்,

சிந்தை நொந்தலறி திரு வெண்ணீறு காணவே

தீயிலிடும் மெழுகு போல

தேகமெல்லாம் கருகி, நீறாகவே நின்று

சென்னியிறு தணிகை மலையில்

சந்ததம் கலியாண சாயுஜ்ய பதம் அருளும்

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே

கண்ட விட பித்தமும், வெப்பு, தலைவலி, வெடிப்பு,

இருமல், காமாலை, சூலை, குஷ்டம்,

கண்ட மாலைத், தொடை வாழை, வாய்ப்

புற்றினொடு, கடினமாம் பெரு வியாதி,

அண்டொணாதச் சுரம், சீத வாதச் சுரம் ,

ஆறாத பிளவை, குன்மம்

அடங்காத விறும்பஃது மேகமுடனால்

உலகத்தில் எண்ணாயிரம் பேர்

கொண்டதொரு நோய்களும் ‘வேல்’ என்று

உரைத்திடக் கோவென்ன ஓலமிட்டு

குலவு தினகரன் முன் மஞ்சு போல்

நீங்கிடும் குருபரன் நீறு அணிந்து

சண்ட மாருத கால உத்தண்ட கெம்பீர

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே

மக மேரு, உதயகிரி, அஸ்திகிரியும்,

சக்ரவாளக் கிரி , நிடத, விந்தம்,

மா உக்ர-தர நரசிம்மகிரி, அத்திகிரி

மலைகளோடு வதன சுமவா

ஜெகம் எடுத்திடு புட்ப தந்தம்,

அயிராவதம் , சீர் புண்டரீக் குமுதம்,

செப்பு சாருவ பூமி மஞ்சனம்,

சுப்பிர தீப வாமனம், ஆதி வாசுகி,

மகா பதுமன், ஆனந்த கார்க்கோடகன்,

சொற்-சங்க பால குளிகன் ,

தூய-தக்கன், பதும-சேடனோடு,

அரவெலாம் துடித்துப் பதைத்து அதிரவே

தக தகென நடனமிடு மயில் ஏறி விளையாடும்

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே

திங்கள் பிரமாதியரும், இந்திராதி தேவரும்,

தினகரரும், முனிவரோடு சித்திர புத்திரர், மௌலி அகலாமல்

இருபாதம் சேவித்து நின்று தொழவும்,

மங்கை திருவாணியும் , அயிராணியொடு,

சத்த மாதர் இரு தாள் பணியவும்,

மகாதேவர் செவி கூறப் பிரணவம் உரைத்திட

மலர்ந்த செவ்வாய்கள் ஆறும்,

கொங்கை, களபம், புணுகு, சவ்வாது

மணி வள்ளி , குமரி தெய்வானை-யுடனே

கோதண்ட பாணியும் , நான்முகனும்

புகழ் குலவு திருத்தணிகை மலை வாழ்

சங்கு சக்கரம் அணியும், பங்கயக் கரம் – குமர

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே

மண்டலம் பதினாலு லோகமும்

அசைந்திட , வாரிதி ஒரு ஏழும் வரள,

வலிய அசுரர் முடிகள் பொடி படக்

கிரவுஞ்ச மாரி எழத், தூளியாகக்

கொண்டன், இறமெனும் அசுரர் அண்டங்கள்

எங்குமே கூட்டமிட்டு ஏக ,

அன்னோர் குடல், கை, காலுடன், மூளை, தலைகள்

வெவ்-வேறு-ஆகக் குத்திப் பிளந்து எரிந்து

அண்டர்பணி கதிர்காமம், பழனி

சுப்பிரமணியம், ஆவினன்குடி யோகம்,

அருணாசலம், கயிலை, தணிகைமலை,

மீதில்-உரை ஆறுமுகப் பரம குருவாம்

சண்ட மாருத கால சம்மார அதி தீரா

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே

மச்சம் குதித்து நவமணி தழுவ

வந்த நதி வையாபுரி பொய்கையும்

மதிய முத்தம் செய்யும் பொற்கோபுரத்து

ஒளியும், வான் மேவு கோயில் அழகும்

உச்சிதமதான திரு ஆவினன் குடியில்

வாழ் உம்பரிட முடி நாயக

உக்ர மயில் ஏறி வரு முருக! சஹ(ர)வண பவ!

ஓம்கார சிற்சொரூப வேல் !

அச்சுத ! கிருபாகர ! ஆனை முறை

செய்யவே, ஆழியை விடுத்து, ஆனையை

அன்புடன் ரட்சித்த திருமால் ! முகுந்தன் !

எனும் அரி கிருஷ்ண ராமன் மருகன் !

சச்சிதானந்த பரமானந்த சுரர் தந்த

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே

வேலும் மயிலும் துணை !

முடிந்தவர்கள் இலங்கையில் திருகோணமலையில் தென்கயிலை கதிர்காமம் என்று போற்றப்படுகின்ற பாலயூற்று ஸ்ரீ பாலமுருகன் தேவஸ்தானத்தில் உலகிலேயே மிக பெரிய வேலாக எழுந்ததருளியுள்ள ஸ்ரீ சத்ரு சம்கார ஞான வேலை ஒரு தரம் சென்று வழிபாடு செய்யுங்கள்.

(குபேரன் வேல் பூஜை செய்து அனைத்து வல்லமைகள் அனைத்தையும் பெற்ற இடம் இந்த திரிமூர்த்திமலை என்ற திருகோணமலை….)

தென்கயிலை கந்தனின் வேல் கனவிலும் காக்கும்.

          - *சித்தர்களின் குரல் shiva shangar*

Similar Posts